விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3.4 கிலோ தங்கம் பறிமுதல்

 

இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இலங்கையிலிருந்து வந்த பயணிகளை சோதனை செய்த போது, 3 புள்ளி 4 கிலோ கொண்ட தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

தங்கக்கட்டிகளை உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த இலங்கையை சேர்ந்த முகமது ரிஸ்கான், அல்தாப், முகமது ரிமாஸ், முகமது ரபீக், முகமது லகீர் மற்றும் பெண் பயணி சம்சுல் வாடிகா உள்ளிட்ட 6 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்பதால் விமான நிலையத்தில் சோதனைகள் கடுமையாக இருக்காது என்று எண்ணி கடத்தலில் ஈடுபட்டதாக கைதானவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். கடத்தல் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version