250 சவரன் நகைகள் கொள்ளை ; நகைகள் தங்க கட்டிகளாக மீட்பு!

கடன் பிரச்சினையில் கொள்ளையடிக்கப்பட்டு, மும்பையில் விற்ற 250 சவரன் நகைகளை, தனிப்படை காவல்துறையினர் தங்க கட்டிகளாக மீட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் நூருல் ஹக் என்பவரையும், அவரது மனைவியையும் கட்டிப்போட்டு, வீட்டில் இருந்து 250 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கொடுத்த கடனை திருப்பி தராததால், உறவினர் மொய்தீன் என்பவரே கடத்தல் நாடகமாடி, நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த நிலையில், மொய்தீனின் செல்போன் பேச்சை ஆய்வு செய்ததில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டு, உருக்கி தங்க கட்டிகளாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை சென்ற தனிப்படையினர், நகை கடை உரிமையாளரிடமிருந்து 150 சவரன் அளவிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர், மேலும், தலைமறைவாக உள்ள மொய்தீனையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version