12 ஆயிரம் தலைமையாசிரியர் பணியிடங்கள்! 17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்! நிரப்பாமல் இழுத்தடிக்கும் பள்ளிக்கல்வித்துறை!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்…

கோடை விடுமுறை முடிவடைந்து 2023-24ஆம் கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை விநியோகிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், புத்தகங்களை விநியோகிக்கவும், மாணவர்களுக்கு கற்பிக்கவும் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை என ஆசிரியர்கள் சங்கங்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன.

தமிழகத்தில் 700 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களும், 435 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களும், சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைத்து வைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக தமிழக ஆசிரியர் கூட்டணி புகார் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதேபோல போதிய பணி அனுபவத்தோடு பலர் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு காத்திருக்கின்றனர். ஆனால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்பாமல் பள்ளிகளைத் திறப்பதால் மாணவர்களின் கல்வி பெரியளவில் பாதிக்கப்படும் என ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

தனது நண்பரான வாரிசு அமைச்சரின் புதுப்பட புரமோஷனில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவ்வப்போது தனது துறையில் நிலவும் சிக்கல்களில் கவனம் செலுத்தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கும்…

– செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சித்தார்த்…

Exit mobile version