"ரெட் அலர்ட்டால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை"

ரெட் அலாட்டால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர் தெரிவித்தார்.

தென் தமிழகப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீட்டர் மழையும் செங்கல்பட்டில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கூறிய அவர், வரும் அக்டோபர் மாதம் 8 தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறினார்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் அது அடுத்த ஓரிரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தொடர்ந்து புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் தெரிவித்தார். மேலும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். எனவும் தென்மேற்கு பருவமழை வட இந்திய பகுதிகளில் இருந்து அடுத்து வரும் மூன்று தினங்களில் படிப்படியாக விலகி வரும் அக்டோபர் மாதம் 8 தேதி, வடகிழக்கு பருவமழை தமிழகம்,  கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

மீனவர்கள் குமரிக்கடல் லட்சத் தீவுகள் தென் கிழக்கு மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் இன்று முதல் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரெட் அலர்ட்டால் எந்த பயமும் வேண்டாம் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனீ, நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். 

Exit mobile version