மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் கோரிக்கை

கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை, வெள்ளத்தால் அந்த மாநிலம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. தற்போது அங்கு மழை குறைந்து, நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், வெள்ள நிவாரணமாக மத்திய அரசு 600 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. இருப்பினும், கேரளாவை சீரமைக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு தரப்பிலும் கேரளாவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டன. இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகள் கேரளாவுக்கு அறிவித்த நிதியுதவியை ஏற்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வெள்ள பாதிப்பை சீரமைக்க வெளிநாட்டு நிதியுதவியை பெற அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் வெளிநாட்டு நிதி உதவி ஏற்றுக் கொள்ளப்படும் என்று இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version