நிலக்கரி தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் அலுமினியம் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் அலுமினியம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அலுமினிய உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு அச்சங்கத்தினர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் மின்உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மின்உற்பத்தி நிலையங்கள் மட்டுமல்லாது இன்னபிற தொழிற்சாலைகளும் நிலக்கரியை மூலப்பொருளாக நம்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

செப்டம்பர் 22-ந் தேதி முதல் மாநிலங்களில் செயல்பட்டு வரும் மின்உற்பத்தி நிலையங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலக்கரியை அனுப்புவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிற தொழிற்சாலைகளும் நிலக்கரியை நம்பி உள்ளதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அலுமினிய கச்சாப்பொருளை அமெரிக்காவில் இருந்தும் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவுவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த காரணங்களால் இந்தியாவில் அலுமினிய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை சீர்செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version