தமிழர்களின் உதவியை மறக்க முடியாது! கேரள அமைச்சர் உருக்கம்!!

தமிழர்களின் உதவியை கேரள மக்கள் மறக்க மாட்டார்கள் என்று அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலில் தெரிவித்துள்ளார். கோவையில் ஐக்கிய ஜமாத் மற்றும் நூர்சேட் குழுமம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட கேரள அமைச்சர் ஜலில், பின்னர் செய்தியளர்களைச் சந்தித்தார். கேரள வெள்ள பாதிப்பிற்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் உதவி செய்ததாக கூறிய அவர், தமிழக மக்களின் உதவி அதிகளவில் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த உதவியை கேரள மக்கள் மறக்க மாட்டார்கள் என ஜலில் கூறினார். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கேரள மக்களுக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளதை நினைவு கூர்ந்த அவர், வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி மற்றும் எலி காய்ச்சல் தடுப்பு பணிகளை கேரள அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.

Exit mobile version