கருணாஸின் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை சேதப்படுத்திய வழக்கில், கருணாசின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு புலித்தேவன் பிறந்தநாள் விழாவின் போது மரியாதை செலுத்தச் சென்ற திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கும், தேவர் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக கருணாஸ் உட்பட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கருணாஸை கைது செய்ய திருநெல்வேலி போலீசார் சென்னை வந்தனர். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் போலீசார் கைது செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

இந்தநிலையில், முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி வழக்கை அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

Exit mobile version