அண்ணா பிறந்த நாள் விழா – அதிமுகவினர் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக பிரமுகர்கள் வாலாஜாபாத் பா.கணேசன்,வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள, அவரது திருவருவச் சிலைக்கு, அதிமுக குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின் ஒன்றிய செயலாளர் சின்னுசாமி அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரையில் அண்ணா 110வது பிறந்த நாளையொட்டி அவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூரிலும் அண்ணா பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிமுக மாவட்ட அவைத் தலைவர் கோ. அய்யப்பன், நகரச் செயலாளர் குமரன் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக எம்பிக்கள் அர்ச்சுனன், கோபாலகிருஷ்ணன், எம்எல்ஏ சாந்தி உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக நடைபெற்ற ஊர்வலகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version