அசாமில் மேலும் ஒரு திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார்!

மகாராஷ்டிரா,மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் திருநங்கை ஒருவர் நாட்டின் மூன்றாவது நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் லோக் அதாலத் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக சுவாதிபிதான் ராய் என்ற திருநங்கை இன்று நீதிபதியாக பதவியேற்கிறார். இந்தநிலையில், தன்னை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது தனது சமுதாயத்திற்கு மிகவும் சாதகமான ஒன்று என ராய் தெரிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த விழிப்புணர்வை உருவாக்க இது உதவும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோன்தால் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார். தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யா கம்ப்ளே நாக்பூரில் 2-வது திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார். இந்தநிலையில், 3-வது நீதிபதியாக சுவாதிபிதான் ராய் இன்று பதவியேற்க உள்ளார். தமிழத்தில் பரமக்குடியை சேர்ந்த திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா என்பவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version