"நம்பர் 1 டெஸ்ட் பவுலர் வருவதைப் பார்க்கிறேன்" முகமது அபாஸை புகழும் கிரிக்கெட் வீரர்கள்

அபுதாபியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றியது. இதில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் அபாரமாக பந்துவீசி இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தொடரில் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் முகமது அப்பாஸ்.

முகமது அபாஸின் இந்த பந்து வீச்சை பாராட்டி கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டிய வண்ணம் இருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் முகமது அபாஸை பற்றி கூறும் போது “நம்பர் 1 டெஸ்ட் பவுலர் வருவதைப் பார்க்கிறேன்… முகமது அப்பாஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த நம்பர் 1 பவுலராக இருப்பார்” என்றும் கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல, இந்திய வீரர் முகமது கைஃப், இங்கிலாந்து வீரர்கள் மைக்கல் வான், காலிங்க்வுட் உள்ளிட்டோரும் முகமது அப்பாஸை புகழ்ந்துள்ளனர்.

பால் காலிங்க்வுட் கூறும்போது, ‘ஆடமுடியாத பந்துவீச்சு’ என்று தனது ட்வீட்டில் அபாஸை புகழ்ந்துள்ளார்.

மைக்கேல் வான், ‘முகமது அப்பாஸை நான் எதிர்கொண்டால் 6 பந்துகளுக்குள் என்னை வீழ்த்திவிடுவார். என் வயிற்றைக் கலக்கும் ஒரு பந்து வீச்சாளர்’ என்று அவர் பங்குக்கு பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமத் அபாஸை பற்றி கூறும் போது ஆஸ்திரேலியா அணியினர் அபாஸின் பந்து வீச்சை பற்றி கவலைப்படவில்லை அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி தான் கவலை கொண்டனர். இருப்பினும் அப்பாஸ் தன் திறமையை காட்டிவிட்டார் என்று கூறியுள்ளார்.

இப்படி அபாஸின் பந்து வீச்சை பற்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த பெயரை முகமது அப்பாஸ் தக்கவைத்து கொள்வாரா அல்லது இழப்பாரா என்பது வருகின்ற போட்டிகளில் தான் தெரியும்.

Exit mobile version