காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால், அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நீர்வரத்து 72 ஆயிரம் கனஅடிக்கு மேல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியிலிருந்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகு வழியாக 55 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மேட்டூர் அணை நீர்மின் நிலையத்தின் வழியாக 15 ஆயிரம் கனஅடி நீரும், கால்வாய் வழியாக ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளுக்கு செல்வதையும், செல்பி எடுப்பதையும் மக்கள் தவிர்க்குமாறு நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

Exit mobile version