உ.பி. பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் ஜனவரி முதல் மார்ச் வரை திருமணம் நடத்த தடை – முதல்வர்

ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடத்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாட்டு பணிகளை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் ஒரேசமயத்தில் லட்சக் கணக்கில் கூடும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.

அதன்படி குறிப்பிட்ட மாதங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறு மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version