மேற்கு வங்கத்தில் யோகி, ஸ்மிருதி தேர்தல் பிரசாரம் செய்ய தடை

உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

மத்தியில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் மாநிலத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கியமானவராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அவர்களின் பிரசாரத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று மம்தா அரசு கூறியுள்ளது.

Exit mobile version