மரகத நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயன்றவர்களை 2 வாரங்களில் பிடித்து விடுவோம்- பொன். மாணிக்கவேல்

 

உத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜர் சிலையைக் கொள்ளையடிக்க முயன்றவர்களை இன்னும் 2 வாரங்களில் பிடித்து விடுவோம் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கோவிலில் உள்ள மங்கள நடராஜர் சிலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்திரா தரிசன நாளன்று சந்தனக்காப்பு நடைபெறும். அன்று மட்டும் பக்தர்கள் மரகத நடராஜர் சிலையைக் கண்டு வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் காவலரை தாக்கிவிட்டு நடராஜர் சிலையை கடத்த முயன்றுள்ளனர். அபாயச்சங்கு ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல், இராமநாதபுரம் சரக டிஐஜி காமினி, இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உத்தரகோசமங்கை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், விசாரணைக்குக் காவல்துறையினர் சிறப்பான ஒத்துழைப்பு அளித்துவருவதாகவும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை இன்னும் 2 வாரங்களில் பிடித்துவிடுவோம் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version