கனமழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 131 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 723 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஒரே நாளில் 800 கனஅடி அதிகரித்து வினாடிக்கு ஆயிரத்து 131 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 3 ஆயிரத்து 866 மில்லியன் கனஅடியாகவும், அணையின் நீர்மட்டம் 126 புள்ளி 15 அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக வினாடிக்கு ஆயிரத்து 420 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version