பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை- ரூ. 2.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்னை குறளகத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பேரூராட்சியில் உள்ள பல்வேறு கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சமாக பணத்தை பெற்று கொண்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அதிரடியாக டவுன் பஞ்சாயத்து இயக்கக அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அலுவலர்களிடமும், அதிகாரிகளிடமும் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு துறை உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கோப்புகளில் உள்ள ஆவணங்களை கைப்பற்றியும், மனுக்களை ஆராய்ந்தும், கணினியில் உள்ள தகவல் அடிப்படையிலும், நீண்ட நேரத்திற்கு சோதனை நடைபெற்றது. நேற்று மாலை மூன்று மணியிலிருந்து நள்ளிரவு இரண்டு மணி வரை நடைபெற்ற சோதனையில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version