வைஜெயந்திமாலாவாக நடிக்க ஆசை – நடிகை பூஜா குமார்

சினிமாவில், பழம்பெரும் நடிகர், நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாவது வழக்கம். அப்படிப்பட்ட படங்கள் பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே, ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தொடங்கிவிடும். அதேபோல், நடிகர்களின் எதிர்பார்ப்பும் தொடங்கிவிடும். ஆம், அதில் யார் நடிப்பது என்ற போட்டிதான் அது. அந்த வரிசையில், தற்போது, ஒரு நடிகையின் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது.

விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களில், நடிப்பால் மட்டுமல்லாமல், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூஜா குமார். இந்த படங்களின் வெற்றி, இவரை முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைத்தது. ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் ஒரு வேடத்தின் மீது ஆசை இருப்பது போல், இவருக்கும் ஒரு ஆசை இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில், தமிழ் சினிமா ரசிகர்களை, தன் அழகாலும், ஆட்டத்தாலும் ஆட்டுவித்த வைஜெயந்தி மாலா வின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவானால், அதில் வைஜெயந்திமாலாவின் வேடத்தில் தான் நடிக்க விரும்புவதாக பூஜா குமார் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ள பூஜா குமார், அது நான்காண்டு உழைப்பிற்கு ரசிகர்கள் கொடுத்த வெற்றி என்றும், அதனால் உற்சாகத்தில் திளைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மருதநாயகம் படத்தை தொடங்குவது பற்றி உலக நாயகனிடம் தான் கேட்டதாகவும், கடின உழைப்பு, நீண்ட நாள் தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் போன்றவை தேவைப்படுவதால், அதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

வாய்ப்பு கிடைத்தால், அந்த படத்தில் தான் நடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தற்போது பரபரப்பாகியிருக்கும், மீ டூ பற்றி கருத்து தெரிவித்துள்ள பூஜா குமார், புகார் தெரிவித்துள்ளவர்களை பாராட்டியுள்ளார். பெண்களை பற்றிய மதிப்பீடுகளை மாற்றி அமைக்க இது உதவும் என்றும் பூஜா குமார் கூறியுள்ளார்.

 

Exit mobile version