சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவங்கியது

வரும் 23-ம் தேதி, சென்னையில் நடைபெற உள்ள சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.

ஐபிஎல் திருவிழாவை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு, 14 புள்ளிகளுடன், சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. டிக்கெட் விற்பனை துவங்கியதுமே, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

ஏற்கனவே, கடந்த 14-ம் தேதி, ஹைதராபாத் அணியுடன் மோதிய சென்னை அணி தோல்வியை தழுவியது. அந்த போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடவில்லை. ஆனால், வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில், தோனி களமிறங்குவதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த போட்டியில், ஏற்கனவே ஏற்பட்ட தோல்வியை ஈடுகட்டும் விதமாக, சென்னை அணி, தோனி தலைமையில் அபார வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில், 8 புள்ளிகளையே பெற்றுள்ள ஹைதராபாத் அணி, வெற்றி பெறும் முனைப்பில் ஆடும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Exit mobile version