வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை

வடக்கு ஆந்திரா, தெற்கு ஒரிசா கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்” என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழைபெய்த விவரம்:

வானுரில் (விழுப்புரம்) அதிகபட்சமாக 9 செ.மீட்டரும், முண்டியம்பாக்கத்தில் (விழுப்புரம்) 7 செ.மீட்டரும், திருத்தணி (திருவள்ளூர்), புதுச்சேரி, சோழவந்தான் (மதுரை), குடவாசல் (திருவாரூர்), கஞ்சனுர் (விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீட்டரும், கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), வலங்கைமான் (திருவாரூர்), சிவகாசி (விருதுநகர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்), கோலியனுர் (விழுப்புரம்), நெமூர் (விழுப்புரம்), அதனபுரம் (விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீட்டரும், காரைக்கால், கமுதி (ராமநாதபுரம்), தரங்கம்பாடி (நாகப்பட்டினம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மேலூர் (மதுரை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை ) ஆகிய இடங்களில் குறைந்தபட்சமாக தலா 3 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்றும், இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version