கரூர் ஆட்சியருக்கு மிரட்டல்: செந்தில் பாலாஜி, காங். வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திமுகவினர், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, அராஜகம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. தேர்தல் வந்தால் சொல்லவே தேவையில்லை, அந்தளவுக்கு அடிதடி, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து, தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். பிரியாணி கடை, அழகு நிலையம், டீக்கடை உள்ளிட்ட இடங்களில் அடிதடி, பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்த திமுகவினர், தற்போது எல்லை மீறி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தங்களது அராஜகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

கரூர் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் வீட்டின் முன்பு, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டு, மிரட்டும் தொனியில் மிக கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளனர். திமுகவினரின் இந்த எல்லை மீறிய அராஜகம் குறித்து ஆட்சியர் அன்பழகன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆட்சியரின் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது தான்தோன்றி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version