தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தை சீரமைக்கும் பணி துவங்கியது

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் ராஜகோபுரம் சீரமைப்பிற்காக சாரம் கட்டும் பணி துவங்கியுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளை கடந்து கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இந்தக் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.

மராட்டிய கோபுரம், கேரளாநாதன் கோபுரத்தை தூய்மைப்படுத்தும் பணி முடிவடைந்த நிலையில், தற்போது 216 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தை தூய்மைப்படுத்தும் பணிக்காக சாரம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோபுரம் பாசிபடிந்து கருப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வகையில், முதல்கட்டமாக தேங்காய் நார் தூரிகை மூலம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து அமோனியாவை தண்ணீரில் கலந்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதன்மூலம் கோபுரத்தில் பூஞ்சை காளான்கள் வருவது தடுக்கப்படும்.

தொடர்ந்து மழைநீரால் கற்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க ஹைட்ரோபோபிக் என்ற சிலிக்கான் கலவைப் பூச்சு செய்யப்பட உள்ளது. பழமையான இந்தக் கற்கள் சிதையாத வண்ணம் வேதித்தன்மை குறைந்த பொருட்கள் சுத்தப்படுத்தும் பணியில் பயன்படுத்தப்படுகின்றன.

Exit mobile version