எதையாவது சொல்லி ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்

திமுக தலைவர் ஸ்டாலின் எதையாவது சொல்லி ஆட்சிக்கு வந்துவிடலாம் என பகல் கனவு காண்கிறார், அது பலிக்காது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தென்காசி அருகேயுள்ள சண்முகா நகர் பகுதியில் அதிமுக கூட்டணியின் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்றும், மக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட அறிக்கை என்றும் கூறினார். குடிசைகள் இல்லாத நகரமாக மாற்ற கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் நலனுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் துணை முதல்வர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் கரிவலநல்லூர் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதலமைச்சர், மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வரப்படவில்லை என தெரிவித்தார். காங்கிரஸ் – திமுக ஆட்சியின் போது சேது சமுத்திர திட்டத்தின் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர், யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே திமுகவினரின் அராஜக போக்கு எல்லை மீறி சென்றுகொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version