சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை-தலைமறைவாகாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிடம் டேராடூனில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில், கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபாவிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு டேராடூன் சென்றனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவசங்கர் பாபாவிடம் டிஎஸ்பி குணவர்மன், ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகியோர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் விதமாக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தரைமார்க்கமாக நேபாளம் தப்பிச்செல்வதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து, சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு, அப்பள்ளியில் வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

 

Exit mobile version