உண்மையிலேயே நீங்கள் சிறந்த வீரர் தான்: ஷாகித் அப்ரிடி

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிக் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கேப்டன் விராட் கோலி, 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியின் மூலம் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் (2,441) அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும், குறைந்த போட்டிகளில் அதிக அரைசதம் (22) எடுத்து சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா போட்டியை அடுத்து, விராட் கோலி மீண்டும் ஒருமுறை மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும், பேட்டிங் சராசரி 50-க்கும் மேல் வைத்துள்ளார் என்று ஐசிசி, ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார். ஐசிசி ட்வீட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “வாழ்த்துக்கள் விராட் கோலி. நீங்கள் உண்மையிலேயே சிறந்த வீரர் என்றும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார். மேலும், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்க்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version