தவணை செலுத்தாததற்காக வசை – தனியார் நிதிநிறுவனத்தினர் அடாவடி

தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கடன் தவணை செலுத்தாத வீட்டின் உரிமையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம், ராமமூர்த்தி சாலையில் “ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ்” என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் விருதுநகர் அய்யம்மாள் நகரை சேர்ந்த செந்தில்குமார் எனபவர் தனக்கு சொந்தமான இடத்தை அடமானம் வைத்து ரூ.2,10,000 ஆயிரம் கடன் பெற்று இருந்தார். அதற்காக 5 ஆண்டுகளாக மாதத் தவணையும் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா காரணமாக வருமானம் இல்லாததால் கடந்த மாதம் செந்தில்குமாரால் தவணை கட்ட முடியவில்லை. இதையடுத்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர், இரவு 8 மணிக்கு மேல் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி தனியாக இருந்த சமயத்தில் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் நிதிநிறுவனத்திற்குச் சென்று எதற்காக இரவு நேரத்தில் வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். தவணை தேதியான 10 ஆம் தேதிக்கு வராமல், முன்கூட்டியே 6 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல், மனைவி தனியாக இருக்கும் சமயத்தில் பணத்தை கேட்டது எதனால் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நிதி நிறுவனப் பணியாளர்கள் “நாங்கள் கந்துவட்டிக்கு தான் பணம் வழங்குகிறோம்; உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்” என்று செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கின்றனர்.

காவல்நிலையத்தில் இது குறித்து செந்தில்குமார் புகார் அளித்திருக்கிறார். தனியார் நிதிநிறுவனப் பணியாளர்களின் அராஜக போக்கு, கடன் வாங்கியவர்களை மன அழுத்ததிற்கு ஆளாக்கி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது. கொரோனா காலத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் தவணை காலங்களை நீட்டித்து உத்தரவிட்டிருந்தாலும். இதுபோன்ற தனியார் நிதி நிறுவனங்களின் அராஜக போக்கும் அரங்கேறி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

Exit mobile version