பழனி கோயில் உண்டியலில் ரூ.4.86 கோடி காணிக்கை

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்19 நாட்களில் உண்டியல் காணிக்கையாக நான்கு கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்  பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக மலைக்கோவில் பிரகாரத்தில் ஆங்காங்கே உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல்கள் அனைத்தும் இருபது நாட்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்ததால் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த19 நாட்களில் ரொக்கமாக நான்கு கோடியே 86 லட்சத்து, ஐந்தாயிரத்து, 720 ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், தங்கம்1070 கிராமும், வெள்ளி 28 ஆயிரத்து 575 கிராமும் கிடைத்துள்ளன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 1691 நோட்டுக்களும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Exit mobile version