பொன்னமராவதி விவகாரம்: வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டதில் இதுவரை 7 பேர் கைது

பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸப் ஆடியோ வெளியிட்ட வழக்கில், இதுவரை 7 பேர் கைதாகியுள்ளனர்.

ஒரு சமூகத்தை பற்றி தவறாக பேசி ஆடியோ வெளியிட்டதால், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வன்முறை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் வாட்ஸப்பில் ஆடியோவை வெளியிட்டது பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிசல்காடு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பதும், அவர் சிங்கப்பூரில் பணிபுரிவதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் இந்தியா வரவழைக்கப்பட்டு கைதானார். செல்வகுமாருக்கு உதவியதாக புதுக்கோட்டை மாவட்டம் நெரிஞ்சிக்குடியை சேர்ந்த சத்யராஜ், பட்டுக்கோட்டையை சேர்ந்த வசந்த் ஆகியோரும் கைதானார்கள். இந்த நிலையில், இந்த ஆடியோ முதன் முதலில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பகிரப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த போலீசார் தொந்துபுலிக்காடு பிரகாஷ், சீக்கன்காடு பாலாஜி, சேதுபாவாசத்திரம் சபரி மற்றும் ரெங்கையா ஆகியோரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version