பாலியல் புகார் குறித்து விரைவில் அறிக்கை வெளியிட உள்ளேன் – மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில், தம் மீதான பாலியல் புகார் குறித்து விரைவில் அறிக்கை வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் 11 பேர் மீ டூ ஹேஷ்டேக் மூலம் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர். அதில் அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி உள்ளிட்ட பலரும் அடங்குவர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சர் அக்பரை கடுமையாக விமர்சித்தன. குற்றச்சாட்டுக்கு அக்பர் பதில் அளிக்காவிட்டால், பதவியை விட்டு விலக வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் நைஜீரியாவில் இருந்து இன்று காலை டெல்லி திரும்பிய எம்.ஜே. அக்பர், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தம் மீதான குற்றச்சாட்டுக்கு விரைவில் உரிய விளக்கத்தை அறிக்கையாக வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மத்திய அமைச்சர் பதவியை அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு மின்னஞ்சல் மூலம் அவர் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் மீது கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version