சென்னையில் ரிசர்வ் வங்கிக்கு பல கோடி ரூபாய் நோட்டுகளை ஏற்றிச்சென்ற லாரி நடுவழியில் நின்றதால் பரபரப்பு

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு பணத்தை எடுத்து செல்லும் வாகனம் திடீர் கோளாறு காரணமாக பாதி வழியிலே நின்றதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மூன்று கண்டெய்னர் லாரிகளில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது கண்டெய்னர் லாரி அமைந்தகரை பகுதியில் திடீர் கோளாறு காரணமாக நின்றது. இதனையடுத்து, அமைந்தகரை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவல் துறையினர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் வாகனத்தை சரி செய்ய உதவினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்ற லாரியை மீட்பு வாகனத்தின் உதவியுடன் ஏராளமான காவல் துறையினர் பத்திரமாக ரிசர்வ் வங்கிக்கு கொண்டு சேர்த்தனர்.

நீண்ட நேரமாக சாலையில் பண வைக்கப்பட்டிருந்த லாரி நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version