திருவொற்றியூரில் கடல் அலையில் சிக்கி 4 மாணவர்கள் பலி

சென்னை திருவொற்றியூர் பகுதியில், கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்10 ஆம் வகுப்பு படித்து வரும் மணலி பல்ஜிபாளையம் பகுதியை சேர்ந்த மாணவன் ராகேஷ் என்ற மாணவனுக்கு நேற்று பிறந்தநாள். எனவே திருவொற்றியூர் கே. வி. கே. குப்பம் பகுதியில் இருக்கும் கடற்கரைக்கு பிறந்தநாளை கொண்டாட மாணவர்கள் வந்துள்ளனர். அதில் மாத்தூரை சேர்ந்த தனுஷ், சின்ன சேக்காட்டை சேர்ந்த ஜெயபாரதி, கோகுல் நாத், மணலி பெரிய தோப்பை சேர்ந்த சுனில் குமார் ஆகிய 4 மாணவர்கள் கடலில் இறங்கி குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் குளித்து விட்டு கரையில் இருந்தனர்.

அப்போது திடீரென்று கடலில் தோன்றிய ராட்சத அலை 4 மாணவர்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் இறங்கி மாணவர்களை தேடினர்.

ஆனால் எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்குள் 4 மாணவர்களையும் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. இந்த நிலையில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து மாணவர் தனுஷ் உடல் மட்டும் பாறைக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இருந்ததை கண்ட மீனவர்கள் பொதுமக்கள் உதவியோடு உடலை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவரின் பெற்றோரும் உறவினர்களும் அப்பகுதிக்கு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். திருவொற்றியூர் காவல்துறையும், மீனவர்களும் கடலுக்குள் இறங்கி மற்ற 3 மாணவர்களையும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை அவர்கள் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. தொடர்ந்து காணாமல் போன மூன்று மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

இதனையடுத்து தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version