வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்து உள்ளது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் இன்று மாலை 3.25 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களுடன், ‘ரீசாட்-2பிஆர்1’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்த 75-வது ராக்கெட் என்ற பெருமையையும் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் பெற்றுள்ளது.

இதனையடுத்து, ராக்கெட்டின் இயக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்த இஸ்ரோ தலைவர் சிவன், அனைத்துச் செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

Exit mobile version