8 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றதையடுத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி 3 தினங்களிலேயே முடிவடைந்தது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி ஒரு முறைதான் 200 ரன்னுக்கு மேல் எடுத்திருந்தது. 3 தடவை 200 ரன்னுக்கு குறைவாக எடுத்தது. முதல் டெஸ்டில் 165 மற்றும் 191 ரன்னிலும், 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 124 ரன்னிலும் சுருண்டு இருந்தது. அந்த அளவுக்கு பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடினர்.

விராட்கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆனதோடு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. கடைசியாக 2011-2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அந்நாட்டு மண்ணில் 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆகி இருந்தது.

இது, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சந்தித்த 2-வது தோல்வியாகும். இந்திய அணி 7 வெற்றி, 2 தோல்விகள் பெற்று, 360 புள்ளிகள் பெற்று, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 180 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 146 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 140 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இலங்கை 80 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 24 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன.

Exit mobile version