வெள்ளாட்டை அடித்துக்கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

சத்தியமங்கலம் அருகே வெள்ளாட்டை அடித்துக்கொன்ற சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து, வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அரசப்பன் என்ற கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த அரசப்பனுக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்றை சிறுத்தை, கொன்று உண்டு கொண்டிருப்பதை பார்த்த, அரசப்பன் சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து அருகிலிருந்த வனப்பகுதிகுள் சிறுத்தை ஓடி மறைந்தது. அரசப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து, தென்னந்தோப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தினர். சிறுத்தையை பிடிப்பதற்காக, கூண்டு வைத்து துப்பாக்கியுடன், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version