வரும் 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையும்: ராஜேந்திர பாலாஜி

வரும் 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி இறுதிகட்ட பிரசாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டார். அப்போது ஓட்டப்பிடாரத்தில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றில் அவர் வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டடப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகி விட்டதாக தெரிவித்தார். மக்கள் நீதிமய்யம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை சந்திக்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டி.டி.வி தினகரன் பித்தலாட்ட அரசியலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர், தற்போது, அவரது பெயரை உபயோகித்து, அதிமுகவை முடக்குவேன் என திமுகவின் பணியை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், வரும் 23ம் தேதிக்குப் பிறகு திமுக இரண்டாக உடையும் என்றும் கூறினார்.

Exit mobile version