ஒரு "100 ரூபாய கூட வைக்கமாட்டியா?" துரைமுருகன் பங்களா சுவற்றில் எழுதிய திருடர்கள்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் திருட வந்தவர்கள், பணம், பொருள் எதுவும் சிக்காததால், விரக்தியில், “100 ரூபாய் கூட வைக்கமாட்டியா?” என சுவற்றில் எழுதிவிட்டு சென்றுள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை மஞ்சகொல்லையில், துரைமுருகனுக்கு சொந்தமாக, 25 ஏக்கரில் சொகுசு பங்களா உள்ளது. கடந்த 12ஆம் தேதி, இந்த பங்களாவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், பீரோவில் ஏதும் கிடைக்காததால், சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை எடுத்துச் சென்றனர். மற்ற பங்களாக்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று காரில் 10 பேர் வந்து சென்றுள்ளது பதிவாகி உள்ளது.

இதனிடையே, துரைமுருகன் வீட்டில் பணம் ஏதும் கிடைக்காத விரக்தியில் “100 ரூபாய் கூட வைக்கலேன்னா… இவ்வளவு பெரிய பங்களா எதற்கு?” என திருடர்கள் சுவற்றில் எழுதிச் சென்றது தெரியவந்தது. இதேபோல், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் “ஓரு ரூபாய் கூட இல்ல…” என எழுதி சென்றுள்ளனர். கொள்ளை குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், திருடர்களின் கைரேகை உள்ளிட்டவைற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் நுழைந்த திருடர்கள், அங்கேயும் இத்தகையை வாசகங்களை எழுதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனிடயே, திருடர்களின் கையெழுத்தை வைத்து அவர்களை உடனடியாக பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version