திமுகவின் பொய் பக்தியும், போலி பகுத்தறிவும்

கடவுள் நம்பிக்கையைக் பொதுவில் கேலி செய்யும் தி.மு.க-வினர், தங்கள் வீட்டுக்குள் ரகசியமாக யாகம், ஹோமம், ஜோதிடம் உள்ளிட்டவற்றை தீவிரமாக பின்பற்றுகின்றனர். இதன்மூலம் போலி பகுத்தறிவு பேசி, பொய் பக்தி கடைபிடிப்பவர்களாக வலம் வரும் தி.மு.க-வினர் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்…

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது வாரிசு உதயநிதிக்கும் நெருக்கமானவராக வலம் வரும் மற்றொரு வாரிசு மகேஷ் பொய்யாமொழி. ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதை மட்டுமே தனது தகுதியாக வைத்துள்ள மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர், தி.மு.க-வின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ என ஏகப்பட்ட பதவிகளை அனுபவித்து வருகிறார்.

மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு தன் விசுவாசத்தைக் காட்டும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் அகில இந்திய ரசிகர் மன்றம் என ஒரு டம்மி அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராகவும் மகேஷ் பொய்யாமொழியே இருந்துவருகிறார். அதாவது, நடிக்காத ஒரு நடிகருக்கும்… அவருக்கு இல்லாத ரசிகர்களுக்கும்… மகேஷ் பொய்யாமொழி அகில இந்தியத் தலைவராக உள்ளார்!

இந்த மகேஷ் பொய்யாமொழி, சமீபத்தில், திருவெறும்பூரில் உள்ள ஒரு கோயிலில் பல்லக்குத் தூக்கிய படம் சமூகவலைத்தளங்களில் பரவி சர்ச்சையைக் கிளப்பியது. தீவிர பகுத்தறிவாளர்களான அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகனுமான மகேஷ் பொய்யாமொழி, நாத்திகவாதம் பேசும் தி.மு.க.வில் இருந்துகொண்டு, கோவிலுக்குப் போய் பல்லக்குத் தூக்கலாமா? என விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், கருணாநிதிக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும், கருணாநிதிக்கு நெருக்கமான முன்னணி தி.மு.க நிர்வாகிகளுக்கும் இந்த இரட்டை வேடம் ஒன்றும் புதிதல்ல. வெளியில் நாத்திகம்… வீட்டிற்குள் ஆத்திகம் என்பதுதான் காலம்காலமாக அவர்கள் கடைபிடிக்கும் இரட்டை நடைமுறை.

ஒன்றே குலம்… ஒருவனே தேவன்… என்ற கோட்பாடு அண்ணா காலத்திலேயே, தி.மு.க-வில் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அண்ணா வழியில் ஆட்சி நடத்திய எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பண்பட்ட தலைவர்களாக நடந்து கொண்டனர். மற்றவர்களின் கடவுள் நம்பிக்கையை என்றைக்கும் அவர்கள் கிண்டலடித்ததும் இல்லை; தங்களுடைய கடவுள் நம்பிக்கையை யாருக்காகவும் அவர்கள் மறைத்துக் கொண்டதுமில்லை.

ஆனால், அண்ணாவின் தி.மு.க-வைக் குறுக்கு வழியில் கைப்பற்றிக் கொண்ட கருணாநிதி, வெளியில், கடவுள் நம்பிக்கையைக் கிண்டலடிப்பார். கேலி பேசுவார். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை பண்டாரம் என்றும் பரதேசி என்றும், மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்வார். உதாரணத்திற்கு, தி.மு.க-வில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தபோது, திருப்பதி… கணேசா… கோவிந்தா… என்று ஊர் முழுவதும் எழுதி வைத்து சிவாஜியை சிறுமைப்படுத்தினார் கருணாநிதி. முன்னாள் எம்.பி. ஆதிசங்கர், நெற்றில் வைத்திருந்த குங்குமத்தை குறிப்பிட்டு, ரத்தம் வழிகிறது… துடைத்துக்கொள் என்று சொல்லி என்று புண்படுத்தினார் கருணாநிதி. பண்ணாரி அம்மன் கோயிலில் தீ மிதித்ததற்காக அந்தியூர் செல்வராஜின் அமைச்சர் பதவியைப் பறித்தார் கருணாநிதி. ஆனால், தன் வீட்டுக்குள் மட்டும் யாகம், ஹோமம், ஜாதகம், ஜோதிடம், பூஜை, பூனஸ்காரங்கள் என அனைத்தையும் செய்ய வைத்தவர் கருணாநிதி என்பது அவரை சுற்றியிருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தினமும் கோபாலபுரத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலுக்கும், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சாய்பாபா கோவிலுக்கும், கருணாநிதியின் மூத்த மகள் செல்வியும், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவும் ஊரில் உள்ள அத்தனைக் கோயில்களுக்கும் செல்வது வழக்கம். தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தீவிரமான சாய்பாபா பக்தர் என்றும், அவர் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு மு.க.ஸ்டாலினை அழைத்துச் சென்று பஜனைகளில் உட்கார வைப்பார் என்றும் அறிவாலயத்திற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுவதுண்டு. கே.என்.நேரு, எ.வா.வேலு, தாமோ.அன்பரசன், பொன்முடி, பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி என முன்னணி தி.மு.க-வினர் அனைவரும் தீவிரமான கடவுள் பக்தி உள்ளவர்கள்தான். வெளியில் நாத்திகம் பேசும் இவர்கள் வீட்டுக்குள் கடவுள் பக்தியைத் தாண்டிய மூடநம்பிக்கைகள் அத்தனையிலும் மூழ்கி இருப்பவர்கள்தான். ஆனால், எளிய மக்களின் கடவுள் நம்பிக்கையை, மூட நம்பிக்கையை கேலி பேசுவதும் இவர்கள்தான்.

இப்படி நடந்துகொள்வதன் மூலம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பமும், முன்னணி தி.மு.க நிர்வாகிகளும், தங்கள் பேசும் நாத்திகக் கொள்கைகளுக்கும் நேர்மையாக இருப்பதில்லை. தங்களது ஆத்திக நம்பிக்கைக்கும் உண்மையாக இருப்பதில்லை. தில்லு முல்லு கழகத்தினர் என்று பெயரெடுத்த தி.மு.க-வினர், கடவுள் நம்பிக்கைக்கு மட்டும் உண்மையாக இருந்துவிடுவார்களா என்ன?

Exit mobile version