புதுக்கோட்டை அருகே வேன், லாரி மோதல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

புதுக்கோட்டை அருகே வேனும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 16 பேர் வேன் மூலம் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 9 பேர் உடனடியாக திருமயம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சிலரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் கணேஷ் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version