தனியார் விடுதியில் தீ விபத்து – உயிரிழந்த 17 பேர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி

டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் பலியாகினர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள ஹோட்டல் அர்பிட் பேலஸ் என்னும் தனியார் விடுதி ஒன்றில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். இந்நிலையில் விடுதியில் அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த ஒரு குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மூச்சுத் திணறல் காரணமாகவே பலர் உயிரிழந்துள்ளதாகவும், கவனக் குறைவாக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Exit mobile version