ஒடிசாவை புரட்டிப் போட்ட டிட்லி புயலுக்கு பலியானோர் எண்ணிகை 57ஆக உயர்வு

ஒடிசாவில் டிட்லி புயல் பாதிப்பில் சிக்கி பலியானோரின் எண்ணிகை 57ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் ஒடிசா மாநிலத்தை தாக்கிய டிட்லி புயல் பெரும் பொருட்சேதத்தையும் உயிர்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறப்பு மீட்பு ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி 17 மாவட்டங்களில் 2 லட்சத்து 73 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.

இதேபோல் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 57 ஆயிரத்து 131 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிட்லி புயல் தாக்கியபோது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இடைக்கால நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

Exit mobile version