தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4  ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சித்து பேசியது தொடர்பாகவும், மத்திய அரசின் தரவரிசை பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான விமர்சனம் குறித்தும் முரசொலி நாளிதழில் முறையே செப்டம்பர் 4, டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் தமிழக முதலமைச்சர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, முதல்வரை விமர்சித்தது, குடியுரிமை சட்டம் தொடர்பாக அரசை விமர்சித்தது ஆகிய இரு  வழக்கில் மார்ச் 4 ம் தேதியும், உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 24 ஆம் தேதியும் ஸ்டாலினை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version