முஷ்பிகுர் ரஹீம் அதிரடியால் வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன், பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுலும் 15 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 13 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் உள்பட 22 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்த நிலையில், ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய மற்றொரு வீரரான ஷிகர் தவான், நிதானமாக விளையாடி 41 ரன்கள் குவித்தார். அவருடன் கைகோர்த்த ரிஷப் பண்ட் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இந்திய அணி இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முஷ்பிகுர் ரஹீம் 60 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் தீபக் சஹார், கலீல் அகமது, சஹால் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மூன்று கொண்ட இருபது ஓவர் தொடரில், முதல் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றிருப்பதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version