நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 30 குழந்தைகள் விற்பனை: சிபிசிஐடி

நாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட அமுதவள்ளி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், குழந்தைகளை விற்க பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. அருள்சாமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குழந்தை விற்பனை மூலம் அவர் பெற்ற ஒருலட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை நடத்திய விசாரணையில் 24 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் என 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், குழந்தைகளை விற்றவர்கள், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து வாங்கி வளர்த்து வரும் பெற்றோர்களை கண்டறிந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version