காணாமல்போன மற்றும் களவுபோன 1,196 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு!

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல்போன மற்றும் களவுபோன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், பொது இடங்களில் செல்போன் பேசி செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகரில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க கடந்த ஜூலை 31ஆம் தேதி புதிய சைபர் குற்றப்பிரிவு அமைக்கப்பட்டது. 12 காவல் மாவட்டங்களில் காணாமல் மற்றும் திருடுபோன ரூ.1,02,00,000 மதிப்புள்ள 1,196 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த செல்போன்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், திருடுபோன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களைக் கொண்டு பிற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட போன்களும் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். செல்போன் காணாமல் போனால் உடனடியாக அந்தப் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Exit mobile version