தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்ற மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசின் மத்திய நீர்வள ஆதார அமைப்பு, தமிழக அரசின் முன் அனுமதியின்றி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியது. இதன் அடிப்படையில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மட்டுமே காரணம் இல்லை என கடந்த 5 -ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. வாரியம் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அறிக்கையால், அந்தப் பகுதியில் மீண்டும் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக இரண்டு வார காலத்துக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தர விட்டனர்.
Discussion about this post