வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா சந்தேகம்

சிவசேனாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், அக் கட்சிப் பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், வாஜ்பாயின் மரண தினம் பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளார். உடல் நலக்கோளாறால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16ஆம் தேதி காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் மறுநாள் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் இறந்து 10 நாட்கள் கடந்துள்ளநிலையில், சாம்னா பத்திரிகையில் சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளிலே வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டதை சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டி உள்ளார். சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றுவதற்காகவும், வாஜ்பாய் 16ஆம் தேதி காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கலாம் என கட்டுரையில் அவர் குறிப்பிட்டு உள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா, வாஜ்பாய் மரண தினம் குறித்து சந்தேகம் கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version