திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் பொதுக்குழு இன்று கூடியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கட்சியின் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்வானவர்களை பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். அதன்படி, தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை தவிர வேறுயாரும் வேட்பு மனு செய்யாததால், கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதாக க.அன்பழகன் அறிவித்தார். இதையடுத்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். கட்சித் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

Exit mobile version