டெல்லியில் சர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்..! – பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

டெல்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

டெல்லியின் துவாரகா பகுதியில் சுமார் 221.37 ஏக்கர் நிலத்தில் ரூ.25,703 கோடி மதிப்பில் அரங்கம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஐஐசிசி) என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகப் பெரிய உள்மாநாட்டு அரங்காகவும், உலகிலேயே 10வது பெரிய அரங்கமாகவும் ஐஐசிசி திகழும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு அமையும் மாநாட்டு அரங்கில் ஒரே சமயத்தில் 11,000 பேர் அமர முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அளவிலும், தரத்திலும் உலகில் தலைசிறந்து விளங்கும் அரங்குகள் அல்லது மையங்களோடு போட்டியை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐசிசி அரங்கில் நட்சத்திர விடுதிகள், உயர் அதிகாரமுடைய அலுவலகங்கள், திறந்தவெளி கண்காட்சி மையம், வாடிக்கையாளர் சேவை பகுதிகள் ஆகிய அமைய உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பர் மாதம் மற்றும் 2024 டிசம்பர் மாதம் என இரு தவணைகளாக இந்த திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version