காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை கொடூரமாக கத்தியால் அறுத்த வாலிபர்

சென்னையில் காதலிக்க மறுத்த 14 வயது பள்ளி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனியை பகுதியை சேர்ந்த 8-வது வகுப்பு பயிலும் 14 வயது பள்ளி மாணவியை, அவரது வீட்டின் கீழ்தளத்தில் வசிக்கும் 27 வயதான நித்தியானந்தம் என்ற  நபர், பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். தன்னை காதலிக்குமாறு சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி வந்துள்ளார். தன்னை காதலிக்க மறுத்தால் சிறுமியின் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என நித்தியானந்தம் தெரிவித்ததால், இது பற்றி தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் நித்தியானந்தத்தை எச்சரித்துள்ளனர். தேர்வு எழுதிவிட்டு சிறுமி வீட்டிற்கு வந்தபோது, அவரது வீட்டினுள் மறைந்திருந்த நித்தியானந்தம், திடீரென சிறுமியின் வாயை பொத்தி அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தபோது, நித்தியானந்தம் தப்பியோடிவிட்டார்.

இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள நித்தியானந்தத்தை தேடி வருகின்றனர். பள்ளிக்கூட வாசலில் நித்தியானந்தத்தை போல் பல இளைஞர்கள் சுற்றித் திரிவதாகவும், இதனால் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தனது மகளுக்கு நேர்ந்ததை போல் வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என கூறினார்.

Exit mobile version