கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார்

சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிய கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சாதியை மட்டும் அல்லாமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்களை தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார். அந்த வகையில் கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூடி, திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க சமத்துவ மக்கள் கட்சி தயாராக இருப்பதாகவும், யாருடனும் கூட்டணி இல்லை என்றும் சரத்குமார் குறிப்பிட்டார்.

Exit mobile version